மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தார் சபாநாயகர் ஓம்பிர்லா….

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து  இன்று பிற்பகல் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன்  ஆகிய 4 பேரும் மக்களவைக்கு வருகை தந்தனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக எந்தவொரு நடவடிக்கையும் நடைபெறாமல் முடங்கி உள்ளது. இன்று காலை அவை கூடியதும், மீண்டும், ஜிஎஸ்டி, அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து, நாடாளு மன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மதியம் வரை இரு அவைகளும் முடங்கின.

இதையடுத்து, இன்று பிற்பகல் 2மணிக்கு அவை கூடியதும், சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என  காங்கிரஸ் மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன்சவுத்ரி,  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட ஓம்பிர்லா, 4 எம்.பி.க்கள் மீதான  சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், இனி, அவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தக் கூடாது என, எச்சரிக்கை விடுத்தார். சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர், மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உடன் மக்களவைக்கு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.