‘யானை’ படத்துக்கு எதிரான வழக்கு: தணிக்கைக் குழு மேல்முறையீட்டுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ‘யானை’ படத்துக்கான சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழு முன் மேல்முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாகவும், கூலிப்படையினராகவும் சித்தரித்துள்ளனர்.குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் வரும் சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளன. கச்சத்தீவு பிரச்சினையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றன.

உயிரைப் பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்க்ளை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் மீனவ சமுதாய மக்களை புண்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபட்டது.

தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தீர்களா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தணிக்கை சான்றை எதிர்த்து தணிக்கை குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.