புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோசா ஆகியோர் மீது அமைச்சர் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது மகள் ஆகியோர் கோவா ரெஸ்டாரண்ட் மற்றும் மதுபான விடுதியின் உரிமையாளர்கள் கிடையாது. அவர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகின்றது. இருவரும் உரிமம் கோரி விண்ணப்பிக்கவும் இல்லை. காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் அவதூறு செய்யும் வகையிலும், தவறான நோக்கத்துடனும், போலித்தன்மை வாய்ந்தாக உள்ளது. அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக திட்டமிட்டு தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த சதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் அவரது மகளுக்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானது. காங்கிரஸ் தலைவர்கள் இருவருக்கும் எதிரான டிவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும். அவர்கள் அதை செய்ய தவறினால் டிவிட்டர் நிர்வாகம் அதனை செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.