108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலைப் பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.
இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த தினமான பூரம் நட்சத்திர நாளையொட்டி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திரு ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஜூலை 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினந்தோறும், ஆண்டாள்-ரங்கமன்னார் பவனி நடைபெற்றது. 5-ம் நாள் நிகழ்ச்சியில் கருடசேவை நடைபெற்றது. இதில் ஆண்டாள்-ரங்கமன்னார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடிப்பூர விழாவில் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் தலைவைத்து சயனக்கோலத்தில் அருள்பாலித்தல் நேற்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் இன்று காலை 09:05 மணிக்கு தொடங்கியது. தேரோட்டத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் இணைந்து கொடியசைத்து தேரை வடம்பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா முழக்கம் எழுப்பி பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கொரோனா ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பிறகு நடக்கும் ஆடிப்பூரத்தேரோட்டம் என்பதால் பக்தர்களின் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.