நடிகர் ஷாருக்கான் படம் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருப்பது போல் நடிகர் ஆமீர் கான் படமும் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவரவில்லை. இப்போதுதான் ‘லால் சிங் சத்தா’ என்ற படம் வெளியாவதற்குத் தயாராகி இருக்கிறது. வரும் 11-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழிலும் படம் டப் செய்யப்பட்டு அதே நாளில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனைப் பார்த்த சிலர் இப்படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று டிவிட்டரில் ஹேசஷ்டேக் மூலம் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
2015-ம் ஆண்டு ஆமீர் கான் அளித்திருந்த பேட்டியில், “எனது மனைவி இந்நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதால் வேறு நாட்டிற்குச் செல்லாம் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறினார்” என்று தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதே பேட்டியை இப்போது மேற்கோள் காட்டி ஆமீர் கான் படத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று டிவிட்டரில் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தச் செய்தி டிரெண்டிங் ஆகியிருக்கிறது. இந்த டிரெண்டிங் செய்தி குறித்து ஆமீர் கான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது ஆமீர் கானிடம் கேட்டதற்கு, “நான் இந்தியாவை விரும்பவில்லை என்று சொல்லும் சிலர் தங்களது இதயத்தில் நான் இந்தியாவை விரும்பாதவன் என்று நம்புகிறார்கள். ஆனால் அது பொய்யானது. சிலர் அவ்வாறு நினைப்பது வருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் புறக்கணிக்காமல் பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
கரீனா கபூர், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனை ஆமீர் கான், கிரண் ராவ் மற்றும் வியாகாம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஆமீர் கான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் ‘பதான்’ படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. ‘லால் சிங் சத்தா’ வெளியாகும் நேரத்தில்தான் நடிகர் அக்ஷய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ படமும் வெளியாகிறது.