“ஒற்றை மத அரசியல்; அமலாக்கத்துறையின் பயத்தால் மக்களால் பேசமுடியவில்லை!" – அசோக் கெலாட்

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்மீது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடைபெற்றுவரும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் காரணமாக, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசைப் பலரும் சாடி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.

அசோக் கெலாட்

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் திட்டங்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அசோக் கெலாட், “அமலாக்கத்துறையின் அதிகாரங்களுக்கு உச்ச நீதிமன்றமே முத்திரை குத்தியிருக்கிறது. அந்த ஏஜென்சியின் நடவடிக்கைகளை இப்போது நியாயப்படுத்த வேண்டிய அவசியம் கூட இல்லை, யாரையும் கைதுசெய்யலாம். மேலும் அமலாக்கத்துறைக்கு, காவல்துறையைவிடவும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒற்றை மத அரசியல் நடைபெறுகிறது. இந்த நாடு இப்படி ஒரு விஷயத்தை எப்போதும் பார்த்ததில்லை. இதனால் மக்கள் கவலைப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள். மேலும், அமலாக்கத்துறையின் பயத்தால் அவர்களால் பேச முடியவில்லை” என்று கூறினார்.

சஞ்சய் ராவத்

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சரை நள்ளிரவில் அமலாக்கத்துறை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், கடந்த ஞாயிறு அன்று அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.