கோவை: கோவை மாநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகரில் முன்னெச்சரிக்கையாக 5 மண்டலத்துக்கும் தலா ஒரு உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள், இதர பணியாளர்கள் இருப்பர். மேலும், தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற மின் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
வால்பாறையில் விடுமுறை
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ மழையின் காரணமாக, வால்பாறை வட்டத்துக்கு மட்டும் இன்று (ஆக. 2) ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.