சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி: பொதுமக்களுக்கும் அழைப்பு

நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று அவர் தனது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக இந்திய தேசியக் கொடியை மாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிறப்பான நாள். நாம் விடுதலையின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது தேசம் வீடு தோறும் தேசியக் கொடி என்ற கூட்டு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. அதன் நிமித்தமாக நான் எனது சமூக ஊடகங்களின் முகப்புப் படங்களை மாற்றியுள்ளேன். நீங்கள் அனைவரும் அதுபோல் மாற்ற வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவுக்கு அவரது பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 2) பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 91-வது ‘மனதின்குரல்’ நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது.

அப்போது பிரதமர் மோடி, “நமது நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளோம். இதையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டுகிறேன். இந்த இயக்கத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 2 முதல் 15-ம் தேதிவரை அனைவரும் சமூக ஊடக முகப்பு புகைப்படங்களில் (புரோபைல்) தேசிய கொடியை பதிவிட வேண்டுகிறேன்” என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.