ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டுமா? கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு

இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவில் பேசிய, சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் கோயில் எதிரே உள்ள கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இந்து முன்னணி சார்பில், ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம்’ என்ற தொடர் பிரச்சாரம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைந்தது. இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாத காலமாக, ‘இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தது.

பிரச்சார பயணம் நிறைவடைந்ததையொட்டி, சென்னை மதுரவாயலில் பிரச்சாரப் பயணம் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. கனல் கண்ணன் பேசிய வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்ற சொன்ன பெரியாரின் சிலையை உடைக்கப்படுகிற நாள் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனல் கண்ணன் அந்த வீடியோவில் பேயிருப்பதாவது: “மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் நாடுகளை பிரிப்பதே இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தம். பிரச்சார பயணம் இன்றோடு முடிந்து விடாது. இனிதான் தெருத்தெருவாக வீடுவீடாக இன்னும் தீவிரமாக பிரச்சார பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இன்று இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் நிறைவு விழா என்று சொல்கிறார்கள். அதுவல்ல, இன்றுதான் தொடக்கவிழா, எப்படி சொல்கிறேன் என்றால், ஸ்ரீரங்கநாதனைக் கும்பிடுவதற்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் கோயிலுக்குள் போய் வருகிறார்கள். அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலையை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் நம் இந்துக்களின் எழுச்சி நாள்.” என்று கூறியுள்ளார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

முகநூலில் தொடர்ந்து தலித் அரசியல் பற்றி பேசிவரும் ஸ்டாலின் தி குறிப்பிடுகையில், “மதவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ள சிரிப்பு நடிகர் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அண்ணல் சிலையை உடைப்பவர்களைத்தான் திராவிட மாடல் கண்டுகொள்ளாது. பெரியார் சிலையை உடைக்கச் சொல்லியுள்ள இந்த சிரிப்பு நடிகரையாவது கைது செய்யுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஸ்ரீரங்கம் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசிய கனல் கண்ணனை கைது செய்யக் கோரி சமூக ஊடங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.