திருச்செந்தூர்: சபரீசனை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய பாஜக

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து யாகம் நடத்தியதாக சபரீசனை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 300-க்குமேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானை தரிசனம் செய்யவந்த பக்தர்களுக்கு அனுமதி மறுத்து, இந்து ஆகமவிதிக்கு புறம்பாக யாகம் நடத்தியதாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் குறித்து தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இந்த யாகம் நடத்தியது தொடர்பான விவகாரத்தை பாஜகவினர் அறநிலையத்துறை வரை கொண்டு சென்றுள்ளதால் சபரீசனின் ஆன்மிக பயணம் அரசியலாகி உள்ளது.
இந்து ஆகம விதிக்கு புறம்பாக யாகம் நடத்தியதாக, சபரீசனின் செயல் முறையை கண்டித்து பாஜகவினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தின் முன்பு சாலைமறியல் போராட்டத்திற்காக குவிந்தனர். அப்போது எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் சார்பில் போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாத பாஜகவினர் காவல்துறையின் மறுப்பையும் மீறி போராட்டம் நடத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
image
அப்போது பாஜக சாலை மறியல் போராட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா காவல்துறையினரிடம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகம விதிக்கு எதிராக யாகம் நடந்தபொழுது ஏன் இவ்வளவு காவல்துறையினர் அப்போது வரவில்லை என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து சபரீசனை கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முறையாக அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக் கூடாது என எத்தனையோ முறை காவல்துறையினரால் கேட்டு கொண்டதற்கு பிறகும் அனுமதியின்றி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.