ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகிலிருக்கும் உப்புமேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன், அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். சம்பவத்தன்று உப்புமேட்டு காலனி பகுதியில் திருவிழா நடந்திருக்கிறது. அன்றிரவு நடந்த தெருக்கூத்து நாடகத்தைப் பார்த்துவிட்டு சிறுவன் வீடு திரும்பியிருக்கிறான். சிறுவன் தனியாக செல்வதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் இளைஞர் ராஜேஸ்குமார், சிறுவனிடம் பேச்சுக்கொடுத்து, முட்புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுவன் கதறி அழுதபடியே வீட்டுக்குச் சென்றிருக்கிறான். பெற்றோர் என்னவென்று கேட்டதற்கு, நடந்த கொடுமையை சொல்லத்தெரியாமல் விவரித்திருக்கிறான். ஆத்திரமடைந்த பெற்றோர் உடனடியாக காவேரிப்பாக்கம் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், கொடூர இளைஞர் ராஜேஸ்குமாரை கைதுசெய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.