2024ல் வெற்றி பெறுவாரா..? – பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் சவால்!

“வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா?” என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சவால் விடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், கடந்த சில ஆண்டுகளாக, பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக, நேற்று அறிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஆளுநர் பாகு சவுகானிடம் வழங்கினார்.

இதை அடுத்து, பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்க, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பழைய கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளித்தது. இதை கடுமையாக விமர்சித்த பாஜக, பீகார் மாநில மக்களை நிதிஷ் குமார் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, எட்டாவது முறையாக, நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், “2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளர் ஆக தான் ஆசைப்படவில்லை என்றும், எதிர்வரும் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தான் ஆசைப்படுகின்றேன் என்றும், 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவார்களா..?” என்றும் கேள்வி எழுப்பினார்.

2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரான நிலையில், 2024 தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சவால் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.