ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் மாவட்டம், வோட்டர்ஹோல் பகுதியில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது. இந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் காஷ்மீர் பண்டிட்டுகள் ராகுல் பட், அம்ரின் பட் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதற்கிடையில், மற்றொரு ரகசிய தகவலின் அடிப்படையில் புல்வாமா மாவட்டத்தில் தகாப் கிராஸிங் என்ற இடத்தில் உள்ள சுற்றுச்சாலைக்கு அருகே தேடுதல் வேட்டை நடத்திய போது சுமார் 30 கிலோ எடையளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டம் முபாரக்பூரில் வசிக்கும் சபாவுதீன் ஆஸ்மி என்பவர் ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர் அவரை நேற்று கைது செய்தனர்.