
கணவரின் மரணம் எதிரொலி: உடல் உறுப்பை தானம் செய்வதாக அறிவித்த மீனா!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவருக்கு தேவையான நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் தனக்கு ஏற்பட்ட இந்த நிலை இன்னொருவருக்கும் ஏற்படக்கூடாது என்று சொல்லி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார் நடிகை மீனா.
இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛இந்த உலகில் ஒரு உயிரை காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உடல் உறுப்பு தானம் என்பது உயிரை காப்பாற்றும் உன்னதமான வழியாகும். நீண்ட நாள் நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு. நான் இதை தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறேன். எனது கணவருக்கு ஒரு நன்கொடையாளர் கிடைத்திருந்தால் எனது வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு நன்கொடையாளர் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும். அதனால் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் மீனா.