காந்தி, நேரு புகழுக்கு அவதூறு – மத்திய அரசை சாடிய சோனியா காந்தி

காந்தி மற்றும் நேரு புகழுக்கு அவதூறு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் துறைகளில் கடந்த 75 ஆண்டுகளில் அதிக திறமை வாய்ந்த இந்தியர்கள் நாட்டை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்து சென்றுள்ளனர். தொலைநோக்கு பார்வை கொண்ட இந்திய தலைவர்கள், திறந்த நிலையிலான, முறையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைமுறைக்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

ஒரு வலிமையான ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகளுக்கான பிரிவுகளையும் உருவாக்கி தந்துள்ளனர். தனது பன்முக கலாசாரம் மற்றும் மொழிகள் ஆகியவற்றால் ஒரு போற்றத்தக்க நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இதே போன்று, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஆசாத் மற்றும் பட்டேல் போன்ற தலைவர்களின் புகழுக்கு அவதூறு ஏற்படும் வகையில், வரலாற்று உண்மைகளை பொய்யாக்க இந்த தற்பெருமை பேசும் அரசு முயற்சிக்கிறது. அதன் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கும். சுதந்திர போராட்டத்தின் போது, இந்திய படையின் தியாகங்களை சிறுமைப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடுகிறது.

இவ்வாறு மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு வெளியிட்ட அரசு விளம்பரத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் படத்தில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.