காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீரி பண்டிட் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள, சோட்டிபோரா என்ற பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில், பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்தை சுற்றி வளைத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர், சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். காயம் அடைந்தவர், அவரது சகோதரர் பிந்து குமார் ஆவார். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. பலியானவர்களில் பலர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது காஷ்மீரி பண்டிட்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பயங்கரவாதிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொது மக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில், ஒரு காஷ்மீரி பண்டிட், ஒரு சீக்கியர் மற்றும் இரண்டு புலம்பெயர்ந்த இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல் குறித்து, ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “கோழைத்தனமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீரி இந்துக்கள் சுனில் குமார், பிந்து ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். காஷ்மீரில் ரத்தக் களரியை பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களுக்கு எதிரிகள்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.