பொறியியல் சேர்க்கை தரவரிசை வெளியீடு; 20-ம் தேதி முதல் கவுன்சலிங் என பொன்முடி அறிவிப்பு

Tamilnadu Engineering counselling rank list released: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்து இருந்தது.

இதையும் படியுங்கள்: பொறியியல் கவுன்சலிங்; எந்த கோர்ஸ் படிக்கலாம்? வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை?

இந்தநிலையில், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ரேங்க் அடிப்படையிலே கலந்தாய்வு நடைபெறும் என்பதால், மாணவர்கள் ரேங்க் பட்டியலை வெளியீட்டை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. 7.5% இடஒதுக்கீட்டு பிரிவு, சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும்.

பொதுப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு வருகின்ற 25ம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், 36000 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 22,587 மாணவர்கள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். விளையாட்டுப் பிரிவின் கீழ் 1,258 பேரும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 970 பேரும், மாற்றுத்திறனாளிகள் 203 பேரும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

தரவரிசைப் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தாலோ, அல்லது வேறு குறைகள் இருந்தாலோ வரும் 19 ஆம் தேதிக்குள் TNEA Seva Centre மூலம் குறைகளை பதிவு செய்யலாம். குறைகள் இருப்பின் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசு பள்ளி மாணவர்கள் வரும் 19 ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.