சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தத் தொடர் டிஆர்பியிலும் கலக்கி வருகிறது. சேனலின் முதன்மையான தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ரசிகர்களை ஈர்க்கும் சின்னத்திரை நடிகர்கள்
பெரியத்திரையில்தான் ரசிகர்களை கவர முடியுமா, இல்லை என்பதை சமீபத்திய சின்னத்திரை நடிகர்கள் நிரூபித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் ரசிகர்களை குறிப்பாக பெண்களை எளிதாக கவரும் இவர்கள், சினிமா பிரபலங்களுக்கு இணையாக பிரபலமடைந்து வருகின்றனர். இதன்மூலம் பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

சீரியல்களுக்கு முக்கியத்துவம்
இதற்கு சிவகார்த்திகேயன், சந்தானம், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் சாட்சிகளாக அமைந்துள்ளனர். ஒவ்வொரு சேனலும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு ஒரே மாதிரியான முக்கியத்துவத்தை தந்து வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் தொடர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே கவனம் கொடுத்து வருகின்றன.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியிலும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இரண்டிற்கும் ரசிகர்கள் அதிக ஆர்வத்தையும் வரவேற்பையும் கொடுத்து வருகின்றனர். இந்த சேனலின் பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்த கதை நகர்ந்து வருகிறது.

விவாகரத்து கொடுத்த பாக்கியா
கோபியின் காதல் லீலைகள் குறித்து தெரியவந்த பாக்கியா, அவருக்கு விவாகரத்தை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரை வீட்டிலுள்ளவர்கள் மனதை மாற்றும்படி வற்புறுத்துக்கிறார்கள். மகள் இனியாவும் தன்னைப் பற்றி அவர் யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். பாக்கியாவின் ஒரே ஆறுதலாக மகன் எழில் அவருக்கு துணை நிற்கிறார்.

ஆதரவாக நிற்கும் மாமனார்
இதனிடையே விவாகரத்து பெற்ற கையோடு வீட்டிற்கு வரும் பாக்கியா, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப முயல்கிறார். அவருக்கு எப்போதுமே துணை நிற்கும் அவரது மாமனார், வீட்டை விட்டு செல்ல வேண்டியது பாக்கியா இல்லை என்றும் தவறு செய்த கோபியே என்றும் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கிறார். கோபியை கழுத்தை பிடித்து வெளியே துரத்தவும் செய்கிறார்.

மௌனம் கலைத்த பாக்கியா
தொடர்ந்து மௌனம் கலைக்கும் பாக்கியா, இனியா தாய் அல்லது தந்தையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிடுகிறார். அவர் தன்னுடன் வரவேண்டும் என்றும் கேட்கிறார். ஆனால் கோபி இதைக்கேட்டு கோபம் கொண்டு அவரை திட்டுகிறார். தொடர்ந்து இந்த விஷயத்தில் இனியாவிடம் பிரச்சினையின் முடிச்சு கொடுக்கப்படுகிறது.

இனியா திட்டவட்டம்
ஆனால் தன்னால் அப்படி ஒருவரை விட்டுவிட்டு மற்றவருடன் வாழ முடியாது என்று இனியா கூறுகிறார். இதனால் மனம் பரிதவிக்கும் பாக்கியா தொடர்ந்து செய்வது அறியாமல் தவிக்கிறார். தொடர்ந்து அங்கு ஏற்படும் குழப்பங்களையடுத்து கோபி, பாக்கியாவின் பெட்டியை வெளியில் தூக்கி வீசி, அவரை வீட்டை விட்டு செல்ல சொல்கிறார்.

பெட்டியில் கோபியின் உடைகள்
இந்த களேபரத்தில் அந்தப் பெட்டி திறந்துக் கொள்ள, அதில் பாக்கியாவின் உடைகள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கோபியின் உடைகள் இருக்கிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது. பாக்கியா ஏன் கோபியின் உடைகளை தன்னுடைய பெட்டியில் எடுத்துக் கொண்டார் என்பது குறித்து வரும் எபிசோட்களில் தெரியவரும்.