இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்புகள், பொதுஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களை பரப்பிய 8 யூடியூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை (ஆக.16) அன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.

குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல்களில், இந்தியாவில் மத நல்லிணக்கத்துக்கு மாறாக வெறுப்பை தூண்டும் வகையிலும், உரிமைகள் தொடர்பான தவறான தகவல்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. மதம் குறித்த கட்டமைப்புகளை தகர்த்தெறிய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியும் மதப்பண்டிகைகளைக் கொண்டாட இந்திய அரசு தடை விதித்து, மதப்போரை அறிவித்துள்ளது என்பன போன்ற செய்தியும், நாட்டில் மதக்கலவரத்தை தூண்டி, பொதுஒழுங்கை சீர்குலைக்க கூடியவையாகும்.

இந்த யூடியூப் சேனல்கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய்யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு தொடர்பான இந்த தகவல்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளன. தகவல் தொடர்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ள இந்த சேனல்கள், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, நாட்டின் பொதுஅமைதி ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன.

தடை விதிக்கப்பட்ட இந்த யூடியூப் சேனல்கள், போலியான மற்றும் பரபரப்பான சிறுபடங்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களின் படங்கள், சில செய்தி தொலைக்காட்சிகளின் லோகோக்களை பயன்படுத்தி, பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் அனைத்திலும் மத நல்லிணக்கம், வெளிநாடுகளுடனான நட்புறவு மற்றும் பொதுஅமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நடவடிக்கைகள் காரணமாக, 2021 டிசம்பர் முதல், 102 யூடியூப் செய்தி சேனல்கள், சமூக ஊடக கணக்குகளை தடை செய்வதற்கான நெறிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டது. உண்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் பாதுகாப்பான இணையவழி சுற்றுச்சூழலை உறுதி செய்வதிலும், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு, பொதுஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியை முறியடிப்பதிலும் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.