சென்னை: மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தளபதி படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
ரோஜா வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை நினைவுப்படுத்தி அரவிந்த் சுவாமி லவ்லியாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
ரோஜா நிகழ்த்திய மேஜிக்
பகல் நிலவு, இதய கோவில், மெளன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், அஞ்சலி, சத்ரியன், தளபதி என வித்தியாசமான ஜானர்களில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் மணிரத்னம். அதுவரை அவரது படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். ஆனால், ரோஜா படத்தில் முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். அதேபோல் பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியான ‘ரோஜா’ திரையில் ரசிகர்களை சொக்கவைக்கும் அளவிற்கு மேஜிக் செய்தது.

ஹீரோவாக அரவிந்த் சுவாமி
மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில், ரஜினி, மம்முட்டி இருவரையும் அடக்கக் துடிக்கும் கலெக்டராக நடித்திருப்பார் அரவிந்த் சுவாமி. அதுவே அவருக்கு முதல் படமும் கூட. நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்திருந்த அரவிந்த சுவாமி, மணிரத்னம் அடுத்து இயக்கிய ‘ரோஜா’ படத்தில் ஹீரோவாக ப்ரோமோஷன் ஆனார். இவரை திரையில் பார்த்த நாள் முதல், ‘அரவிந்த் சுவாமி மாதிரி தான் மாப்பிள்ளை வேண்டும்” என்ற ஆசை, 90ஸ் காலத்து இளம்பெண்களிடம் அதிகமானது.

சிம்பிள் அன்ட் ஸ்மார்ட்
ரோஜா படத்தில் ரொம்பவே சிம்பிளாக நடித்து ஸ்மார்ட்டாக அசரடித்திருப்பார் அரவிந்த் சுவாமி. அன்று முதல் தமிழ் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். தொடர்ந்து ‘பாம்பே’, ‘இந்திரா’, ‘மின்சாரக் கனவு’, ‘என் சுவாசக் காற்றே’ என ரொமண்டிக் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார். அதன் பின்னர் சில வருடங்களுக்கு படங்களில் நடிக்காமல் இருந்த அரவிந்த் சுவாமி, ‘தனி ஒருவன்’ படத்தில் ஸ்மார்ட் வில்லனாக நடித்து, திரும்பவும் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

ரோஜா 30 இயர்ஸ் செலிப்ரேஷன்
தொடர்ந்து தமிழில் படங்களில் நடித்து வரும் அரவிந்த் சுவாமி, ‘ரோஜா’ படத்தின் 30 இயர்ஸ் செலிப்ரேஷனில் இணைந்துள்ளார். 1992 ஆகஸ்டில் வெளியான ‘ரோஜா’, 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனயொட்டி ஏ.ஆர். ரஹ்மானுக்கு கவிதாலயா நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ‘ரோஜா’ 30 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக, அரவிந்த் சுவாமி ட்வீட் செய்துள்ளார். அதில், ரோஜா படத்தின் போஸ்டரை ஷேர் செய்து, ’30 Years of Roja’ என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.