மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக உள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர் மழை மற்றும் கர்நாடக அணை களின் உபரிநீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த மாதம் 16ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை தொட்டது. நீர்வரத்து தொடர்ந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணிக்கு 12 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பு 400 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் , அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.