ஒரே மைதானத்தில் 100 விக்கெட்கள்- தனித்துவமான சாதனை படைத்த ஸ்டுவர்ட் பிராட்

லண்டன்,

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இன்று 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் (லார்ட்ஸ்) 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிராட் பெற்றுள்ளார்.

மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மூன்று வெவ்வேறு மைதானங்களில் சாதித்துள்ளார். அவர் கொழும்பு (156), கண்டி (117), மற்றும் காலி (111) மைதானத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். மற்றொரு இலங்கை ஜாம்பவானான ரங்கனா ஹார்த் காலேயில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.