விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் எதிர் தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி போலீசார் முக்கிய ஆவணங்களை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர்.
குறிப்பாக, சிறப்பு டிஜிபி,பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் பேசிய செல்போன் உரையாடல் மற்றும் வாட்ஸ் அப் தகவல், கால் ஹிஸ்ட்ரி உள்ளிட்ட 4 ஆவணங்களை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். நேற்றுமுன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆவணங்கள் மாயமாகி போயிருந்ததை கண்டு நீதிபதி புஷ்பராணிஅதிர்ச்சியடைந்தார். பின்னர் நீதிமன்ற ஊழியர்கள் மூலம் இந்த ஆவணங்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனிடையே, சிபிசிஐடி போலீசார் மாயமாகி போன ஆவணங்கள் மற்றொரு நகல் உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து வரும் 25ம் தேதிக்கு இதனை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, 3 ஆவணங்கள் கிடைத்து விட்டதாகவும், மேலும் ஒரு ஆவணத்தை தேடி வருவதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆவணங்கள் மாயம் குறித்து நீதிமன்ற ஊழியர்களிடம், நீதிபதி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.