kallakurichi srimathi case:மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டினார்களா! -நீதிமன்றம் சொல்வது என்ன?

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி கடந்த மாதம் பள்ளியின் விடுதியில் இருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கபடும் என தெரிவித்தார்.

இன்று விரிவான உத்தரவை இன்று பிறப்பித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது.

மாணவியின் தற்கொலை குறிப்பில் (கடிதததில்) இருந்துகூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். அதனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார்.

படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது என கருத்து தெரிவித்த நீதிபதி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா இருவரும் நான்கு வாரங்களுக்கு சேலத்தில் தங்கி இருந்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

அதே போல் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நான்கு வாரங்களுக்கு மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு சிடிசிஐடி போலீசார் முன் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், விசாரணைக்கு அழைக்கும்போது போலீசார் முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.