சீனா சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.
சீனா சிச்சுவான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாளில் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள செங்டு நகரில் ஊரடங்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு 4 ஆம் திகதி வரையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம், ஆனால் அவர்கள் கொரோனா இல்லை என 24 மணி நேரத்துக்கு முன்னர் பெற்ற ‘நெகடிவ்’ சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நகரில் 2 கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும் சூப்பர் மார்க்கெட்டுகள், விவசாயிகள் சந்தைகள், மருந்து கடைகள், வைத்தியசாலைகள், உணவு விநியோக சேவைகள் உள்ளிட்டவை தடங்கல் இன்றி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.