திருப்பதி: 17 ஆண்டுகளாக காத்திருந்தும் தரிசனம் இல்லை; ரூ.45 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்

சேலம், அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.ஹரிபாஸ்கர். இவர், கடந்த 2006 -ம் ஆண்டு ஜூன் 27 -ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் `மேல் சாத்து வாஸ்திர சேவை’ என்ற தரிசனத்திற்காக தனக்கும், மற்றொருவருக்கும் 12,250 ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளார். அவருக்கு 2020 ஜூலை மாதம் தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டு மேற்படி ரசீதும் போட்டு கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த காலக்கட்டத்தில் கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் அப்போது தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மேற்படி `மேல் சாத்து வாஸ்திர சேவை’ என்ற தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பின்பு சில நாள்களில் அந்த வாய்ப்பு இல்லை என்று தேவஸ்தானத்தின் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

திருப்பதி திருமலை

கடந்த 17 வருடங்களாக காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், மேற்படி கே.எஸ்.ஹரிபாஸ்கர் தேவஸ்தானத்தின் குறைபாடுகளை மையப்படுத்தி கடந்த ஆறு மாதத்திற்கு முன் சேலம் நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்த்ருந்தார்.

அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இவ்வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. அதில், 1 வருட காலத்தில் மனுதாரருக்கு `மேல் சாத்து வாஸ்திர சேவை’ என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.45 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேற்படி தரிசனத்திற்காக கட்டிய 12,250 ரூபாயை 2 மாதகாலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.