புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அடுத்த வாரத்தில் விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பட்டியலிட்டு விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கை விசாரிப்பது குறித்து கடந்த வாரமே ஆலோசிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை குறித்த அனைத்து விவகாரங்களையும், முன்கூட்டியே விவாதிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், எம்.திரிவேதி, ஜே.பி பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று ஆலோசனை நடத்தியது.
அப்போது தலைமை நீதிபதி, ” இந்த வழக்கு தொடர்பாக எந்த மாநிலங்கள் வேண்டுமானாலும் வாதங்களை முன் வைக்கலாம் எனவும் வாதங்களை முன் வைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் கால அளவு குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணைக்காக செப் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையுள்ள முதல் வாரத்தில் மூன்று வேலை நாட்களும், செப். 19 முதல் செப்.23 வரை உள்ள இரண்டாவது வாரத்தில் இரண்டு வேலை நாட்களும் இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும்.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் முன்வைத்துள்ள சில சிக்கல்கள் குறித்த விவரங்களை வழக்கில் ஆஜராகும் அனைத்து மனுதாரர்களுக்கும் வழங்கி இது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டு அதன் விவரங்கள் வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அன்றைய தினம் வழக்கு குறித்து இறுதி நிலைப்பாடு எட்டப்படும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.