தேவஸ்தான குழுவினர் சந்திப்பு எதிரொலி குஜராத்தில் ஏழுமலையான் கோயில்: நிலம் ஒதுக்கீடு செய்வதாக மாநில முதல்வர் உறுதி

திருமலை: குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும்  உறுப்பினர் கேதன்தேசாய் ஆகியோர் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவுப்படி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் சனாதன இந்து தர்ம பிரசாரத்திற்காக தேவஸ்தானம் எடுத்துள்ள நடவடிக்கைகளை குஜராத் முதல்வரிடம் விளக்கினார்.

ஜம்முவில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கோயில் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மும்பையில் கோயில் கட்ட பூமி பூஜை செய்யவுள்ளோம். குஜராத்திலும் கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை குஜராத் முதல்வர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தகுந்த இடத்தில் தேவஸ்தானத்திற்கு தேவையான அளவு நிலம் ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.