நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 5 மாதம் அவகாசம்: உச்சநீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் விசாரணை முடியவில்லை. வழக்கை ஒரு வருடத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறி நீதிபதி ஹனி எம். வர்கீஸ் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் பேலா எம். திரிவேதி ஆகியோர் விசாரணையை முடிக்க ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் விசாரணை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் தேவையில்லாமல் விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர் என்றும், விசாரணையை விரைந்து முடிக்க தனி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி நடிகர் திலீப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.