சென்னை : பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று பலமுறை மணிரத்தினத்திடம் கேட்டேன் ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி,கமல் கலந்து கொண்டுவிழாவை சிறப்பித்தனர்.
பொன்னியின் செல்வன்
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து, இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் ஆகியோர் நடித்துள்ளனர்.
யார் என்னென்ன கதாபாத்திரம்
ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் ரவியும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழா
இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் நாவல் தொடர்பாக சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினார். நான் பொதுவாக புத்தகங்களின் பக்கத்தை கணக்குவைத்துக்கொண்டுதான் அதனை படிக்கத் தொடங்குவேன். எல்லாரும் பொன்னியின் செல்வன் கதையை படி படி என்றார். உடனே எத்தனை பக்கம் என்று கேட்டேன் ஐந்து பாகங்கள் 2000 பக்கங்கள் என்றார்கள். அட போயானு விட்டுவிட்டேன் என்றார்.
ஜெயலலிதா தான் காரணம்
அதன் பின்னர் தான், 80களில் ஒரு இதழில், பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று கேள்வி ஒன்றை ஜெயலலிதாவிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பாரு என்று சொன்னார்கள். இதை கேட்டதும் நான், அப்படியே குஷி ஆகி விட்டேன். அதன் பின்னர் தான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன். கல்கி தற்போது இருந்திருந்தால் அவர் காலில் விழுந்திருப்பேன் என ரஜினிகாந்த் நெகிழ்ந்து பேசினார்.
மணிரத்தினம் ஒத்துக்கொள்ளவில்லை
மேலும் தொடர்ந்த பேசிய ரஜினி,மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும். இந்த படத்தில் எப்படியாவது ஒரு சின்ன ரோலிலாவது நடிக்க வேண்டும் என்று, மணிரத்தினத்திடம் சென்று பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கேட்டேன். ஆனால், மணிரத்னம், உங்க ஃபேன்ஸ் கிட்ட என்ன திட்டுவாங்க வைக்கிறீங்களா? இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் நான் உங்களை பண்ணவிடமாட்டேன், சாரி சார்னு சொல்லிவிட்டார். இந்த இயக்குநரால் மட்டும் தான் இப்படி சொல்ல முடியும், வேறு எந்த இயக்குநராக இருந்திருந்தாலும் நான் நடிக்கிறேன் என்று சொன்னதும் எப்படியாவது நடிக்க வைத்து இருப்பார்கள் என்ற மணிரத்தினத்தை வெகுவாக புகழ்ந்தார்.