கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 61.
கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் வனத் துறை அமைச்சராக பணியாற்றியவர் உமேஷ் கட்டி. மூத்த அமைச்சரான இவர், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில், அமைச்சர் உமேஷ் கட்டி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு சிறப்பு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நள்ளிரவு 2 மணியளவில் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலை பெலகாவிக்கு எடுத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் காலை 6 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
முன்னதாக எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உமேஷ் கட்டியின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உட்பட அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
உமேஷ் கட்டியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.