மதுரை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடிபில் ( ரெட்பிக்ஸ்) சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக, சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தன் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக கூறப்படும் வீடியோ பதிவு அல்லது அதற்கான தட்டச்சு பதிவை வழங்க வேண்டும் என மனுவாகத் தாக்கல் செய்திருந்தார். அதோடு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரினார்.
அதற்கு நீதிபதிகள், “வீடியோவை வெளியிட்டது, பேசியது நீங்கள். பின்னர் எதற்காக கேட்கிறீர்கள்? உங்களுக்கு அவற்றின் நகல் தேவையா? என கேள்வி எழுப்பினர்.
சவுக்கு சங்கர் தரப்பில், ஆம் என பதிலளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற பதிவாளரிடம் அதன் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க உத்தரவிட்டனர்.
சவுக்கு சங்கர் தரப்பில், இது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. புதிதா? பழையதா? என கேள்வி எழுப்பினார். நீங்கள் பேசியது உங்களுக்கு நினைவில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு,
நான் பல பேட்டிகளை வழங்கியுள்ளேன். அனைத்தையும் என்னால் நினைவில் கொள்ள இயலாது. கால அவகாசம் தேவை என பதிலளித்தார்.
அதையடுத்து கால அவகாசம் தேவை என்பதை எழுத்துப்பூர்வமாக வழங்கிய சவுக்கு சங்கர் 6 வார கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், “இது குறித்து எவ்வித பதிவையும் பதிய மாட்டேன் என உறுதி அளித்தால், கால அவகாசம் வழங்கலாம் என தெரிவித்தார்.அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில் உறுதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கடந்த வாரங்களிலும், இன்றும் இந்த வழக்கு குறித்து சவுக்கு சங்கர் பேசியுள்ளார். நீதிமன்றத்தின் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் என பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 1 வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.