ராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கட்டிடக் கலைநுட்பம், கட்டமைப்பு கலைநுட்ப விருது

சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர் கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விருதுகளை வழங்கவுள்ளது.

பொதுவாகக் கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் பெரும் நிறுவனங்களைச் சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், அவை ஏதோ ஒரு பொறியாளரின் கனவில் / திறனில் உருவானவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்தப் பொறியாளர்கள் தங்கள் தனித்துவத்தைக் கட்டுமானத்திலும், கட்டிடத்தின் உறுதியிலும், பேரிடர்களைத் தாங்கிநிற்கும் திறனிலும், புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முன்னெடுப்புகளிலும் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றனர். அவர்களில்பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல்இருக்கின்றனர். அத்தகைய பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ‘கட்டிடக்கலை நுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலை நுட்ப விருதுகளை’ ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கவுள்ளது.

5 பிரிவுகளில் விருதுகள்

கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்புகள் (பாலம், சாலை, மெட்ரோ ரயில் நிலையம், மருத்துவமனை), பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள் (பூங்கா,விளையாட்டு அரங்கம்), தொழிற்சாலைக் கட்டமைப்புஆகிய 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மாற்றுக் கட்டுமான பொருட்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் (சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல்), புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், குறைவான கட்டுமானச் செலவு, மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டுமானம், பேரிடரைத் தாங்கும் திறன் ஆகியன விருதுக்கான அம்சங்களாகக் கொள்ளப்படும்.

இவ்விருது நிறுவனத்துக்கானது அல்ல. குறிப்பிட்ட திட்டத்துக்குத் தலைமை வகித்த தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம்.

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கட்டிய கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும். இத்துறையின் முன்னோடியான மூத்த பொறியாளர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான பொறியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றும் பொறியாளர்கள் மட்டும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து https://www.htamil.org/01045 என்ற லிங்க்கில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து,வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.