மதுரை: நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாணவர் எவால்ட் டேவிட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வை கடந்த ஜூலை 17ல் எழுதினேன். தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியானது. அதில், எனது எண்ணில் நான் எழுதாத, வேறு நபரின் ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எனது மதிப்பெண் குறைந்திருக்கலாம். எனவே, நீட் தேர்வுக்கான விடைத்தாளை எனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீ.பவானி சுப்பராயன், ‘‘மனுதாரர் எழுதிய நீட் தேர்வுக்கான அசல் ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் அதன் நகலை தேசிய தேர்வு முகமையின் செயலர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை செப். 14க்கு தள்ளி வைத்தார்.
