புதுடெல்லி: டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கு 1000 தாழ்தள பேருந்துகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு புகாரை அனுப்பும் திட்டத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஆம் ஆத்மி அரசின் ஒவ்வொரு துறையும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு, கேஜ்ரிவாலின் நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் செய்யப்படுகின்றன. முதலில் மதுபான உரிமம் ஊழல். இப்போது பேருந்துகள் வாங்கியதில் ஊழல். மிகவும் நேர்மையானவர் எனறு கேஜ்ரிவால் எவ்வாறு தன்னை கூறிக் கொள்ள முடியும்? மோசமான ஊழல்வாதி என அவரை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
முதல்வர் பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. நண்பர்களுக்கு பலன் அளிக்கும் நோக்கத்துடனேயே பேருந்துகளுக்கான டெண்டர் மற்றும் கொள்முதல் குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கலோட் நியமிக்கப்பட்டார். முதல்வர் கேஜ்ரிவாலும் ஊழலும் ஒன்றுதான்.
இவ்வாறு கவுரவ் பாட்டியா கூறினார்.