ராசிபுரம் அருகே அத்தனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் நெடுஞ்சாலையில் புராண கால சிறப்பு கொண்ட அத்தனூர் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கண்ணைக்கவரும் விதமாகவும், மனதை ஈர்க்கும் வகையிலும் புதிய கொடிமரமும், ஒரே கல்லால் கொடிமர கற்பூர பீடமும் அமைக்கப்பட்டு, அம்மன் அருளாட்சி புரிந்து பக்தர் களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள்பாலிக்கிறார்.

இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி தொடங்கி புண்யாஹாவாசனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 9ம் தேதி முதல் கால யாக பூஜை, 10ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 11ம் தேதி 4 மற்றும் 5ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள், அத்தனூர் அம்மன், விநாயகர், அத்தாய் அம்மன், உறுமிக்காரன், முத்துமுனியப்பன், மகாமுனியப்பன்,

ராஜமுனியப்பன், கன்னிமார், ஆதிமூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதனைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசனம், மகா அலங்காரம், மகா நைவேத்தியம் உள்ளிட்டவையும், மூலவர் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கும் சமகால மகா உபதேசமும் விமரிசையாக நடந்தது. இக்கும்பாபிஷேக விழாவில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்பியுமான ராஜேஷ்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான துரைசாமி,

பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் நடராஜன், முத்தாயம்மாள் கல்வி நிறுவனங் களின் செயலாளரும் மாநில திமுக அயலக அணி துணை செயலாளருமான முத்துவேல் ராமசுவாமி, முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, முன்னாள் எம்பி சுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, நாமக்கல் எம்பி சின்ராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரங்கசாமி, அத்தனூர் பேரூர் திமுக செயலாளரும்,

பேரூராட்சி துணை தலைவருமான கண்ணன், பேரூராட்சி தலைவர் சின்னசாமி, கொங்கு பாலிடெக்னிக் தாளாளர் ராம லிங்கம், அம்மன் கிரானைட் உரிமையாளர் முத்துராமசாமி மற்றும் கோயில் நிர்வாக குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரம், அத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.