போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை புதுமையாக நடத்த இயக்குநர் அமீர் திட்டமிட்டுள்ளார்.
10 லட்சம் பரிசுத் தொகையுடன் இளைஞர்களுக்கான மெகா உடற்பயிற்சி போட்டியை நடத்த இயக்குநர் அமீர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாக உள்ளது என அமீர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார். இதில் கலந்துக்கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் வாழ்க்கையை பின்பற்றுகிறோம் – அமீர் வருத்தம்
இம்முயற்சி குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர். “இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

போதை பழக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறுவது பெரிய முயற்சி- அமீர்
நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல, சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம்,” என்று கூறினார்.

முதலில் மதுரையில் பின்னர் சென்னையில் தொடரும் நிகழ்ச்சி
”நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னை போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்தப் போட்டியை நடத்த நினைத்தேன். இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்று அமீர் தெரிவித்தார்.

ரூ.10 லட்சம் வரை பரிசுத்தொகை
மற்ற போட்டிகளை போலல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அமீர் கூறினார். ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.