ஆம் ஆத்மி அலுவலகத்தில் அத்துமீறி சோதனையா?: குஜராத் போலீஸ் மறுப்பு

அகமதாபாத்:குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக  டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில்   பொதுகூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். நேற்றுமுன்தினம் கெஜ்ரிவால் அகமதாபாத் வந்தார். இந்நிலையில், அகமதாபாத், நவரங்புரா பகுதியில்  ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில்  போலீசார் சோதனை நடத்தியதாக  ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து குஜராத் ஆம் ஆத்மி  தலைவர் இசுதன் காத்வி டிவிட்டரில் பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் வந்தார்.

அவர் அகமதாபாத் வந்த சிறிது நேரத்தில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.போலீசார் இரண்டு மணி நேரம் தேடிவிட்டு சென்றுவிட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதை போலீசார் மறுத்துள்ளனர். நவ்ரங்புரா போலீஸ் இன்ஸ்பெக்டர் படேல், ‘‘ரெய்டு தொடர்பான காத்வியின் டிவிட் பற்றிய தகவல் கிடைத்ததும், நான்  தனிப்பட்ட முறையில் கட்சி அலுவலகத்திற்குச் சென்று விவரங்களை கேட்டேன். ஆனால், காத்வி கூறியது போல் யார் வந்தார்கள், உண்மையில் என்ன நடந்தது என்ற விவரம் குறித்து யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.