ஜெட்டா: மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக கடந்த 10-ம் தேதி சவுதி அரேபியா சென்றார். வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு ஜெய்சங்கர் சவுதி சென்றது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில், ஜெட்டா நகரில் அந்நாட்டு பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸை ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை பட்டத்து இளவரசரிடம் ஒப்படைத்தார்.
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆய்வு செய்தனர். மேலும் சமீபத்திய பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த தகவலை சவுதியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை ஜெட்டா நகரில் சந்தித்துப் பேசினேன். அப்போது பிரதமர் மோடி சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருதரப்பு உறவுகளின் நிலை குறித்து விவாதித்தோம்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் காலை, ரியாத் நகரில் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும் இளவரசருமான பைசல் பின் பர்ஹானை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, சர்வதேச அரசியல் நிலவரம், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.