ஜாமீன் கிடைத்தும் சித்திக் சிறைவாசம்: அமலாக்கத் துறையால் சிக்கல்

லக்னோ: உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதும், அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராசில் தலித் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, எரிக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக, கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் உத்தரப் பிரதேசம் சென்றார். அப்போது, அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். கடந்த வெள்ளியன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு டெல்லியில் 6 வாரங்களுக்கு தங்கி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், சிறையில் இருந்து கப்பான் விடுவிக்கப்படவில்லை. அவர் மீது அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் தான் இருப்பார் என்று சிறைத் துறை இயக்குனர் ஜெனரல் சந்தோஷ் வர்மா நேற்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.