மறைந்த தாய், தந்தைக்கு கோயில் கட்டி வழிபடும் ஓய்வு எஸ்ஐ: கும்பாபிஷேகமும் செய்தார்

மதுரை: மதுரையில் மறைந்த தாய், தந்தைக்கு ஓய்வு பெற்ற எஸ்ஐ கோயில் கட்டி வழிபடுகிறார். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(57). தமிழ்நாடு காவல்துறையில் தனிப்பிரிவு எஸ்ஐயாக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி. இவரது 5 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ்பாபு மறைந்த தனது தாய், தந்தையை போற்றும் வகையில் குடும்பத்தினருடன் ஆலோசித்து சிலை வைக்க முடிவு செய்தார். இதனடிப்படையில் தனது வீட்டின் அருகே தனது தந்தை பொன்னாண்டியா, தாயார் மீனாம்பாள் ஆகியோர் நினைவாக கோயில் எழுப்பியுள்ளார்.

அதில் தனது தாய், தந்தை சிலைகளை வடிவமைத்துள்ளார். இந்நிலையில் மறைந்த தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு, சகோதரிகள், சகோதரர்கள், பேரன், பேத்திகள் ஆகியோருடன் சேர்ந்து தாய், தந்தை கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வழிபட்டார். வயதான பெற்றோரை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடும் இன்றைய காலகட்டத்தில், மறைந்த தாய், தந்தை நினைவாக அவர்களுக்கு கோயில் எழுப்பி வழிபடும் ரமேஷ்பாபுவுக்கு அப்பகுதிமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.