சேலம்: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக 13 லட்சத்து 60,000 ரூபாயை, நேற்று ‘மாமன்னன்’ படப்பிடிப்புத் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அவருடன் கூடுதல் கலெக்டர் பாலசந்தர், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் பி.கே.பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ் ஆகியோர் உடன்இருந்தனர்.
ஜருகுமலை மலைப்பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்களை தெரிந்துகொள்ளும் வகையில் (குவியாடி) அமைத்துக் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜருகுமலையில் வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகைப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 55 நபர்களுக்கு ‘மாமன்னன்’ படப்பிடிப்புத் தளத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது.