முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள்: ஆர்.பி.உதயகுமார்

தமிழக முன்னாள் அமைச்சர்களாகிய சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் வீடுகள் உள்பட 39 இடங்களில் இன்று சோதனைகள் நடந்து வருகின்றன. பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வழங்கி உள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினராக பன்னீர் செல்வம் இல்லை. அவர் எப்படி உரிமை கூற முடியும்? அதேபோல் அவர் செய்த கலவரத்தையும் கருத்தில் கொண்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து, தலைமை கழக சாவியை உயர்நீதிமன்றம் எடப்பாடியார் இடம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை கழகத்தில் உள்ள தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சூழ்நிலையில், இதை திசை திருப்பவும் தமிழக அரசு காழ்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் இல்லங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்கள் மீது சோதனை நடத்தி வருகிறது.

மின்சார கட்டணம் 52% உயர்வு, 150 சதவீத சொத்து உயர்வு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, இதற்கெல்லாம் மேலாக பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து போதை வஸ்துகளை பயன்படுத்தி வருவதை கண்டு தமிழகம் எங்கே செல்கிறது என்று நீதிமன்றமே கடும் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்துள்ளது. அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். இதை எல்லாம் சீர்படுத்த வேண்டிய காவல்துறை பிரதான எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எத்தனை முறை சோதனை செய்வீர்கள் என்று மக்களே சலிப்பு தட்டும் வகையில் சோதனை செய்து வருகின்றனர். காவல்துறை தங்கள் கடமையாற்றாமல் எதிர்க்கட்சியை பழிவாங்கும் ஏவல் துறையாக உள்ளது.

 முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு 99 விருதுகளை பெற்றுக் கொடுத்தார். எடப்பாடியாரின் தளபதியாக செயல்பட்டுவருகிறார். ஆனால் எங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்து வண்ணம், அதிமுகவை எடை போடும் வகையில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மூலம் எங்களை சோர்வடைய செய்ய முடியாது. 

இது போன்ற சோதனைகள் மூலம் ஜனநாயக விரோத போக்கை அரசு கடைப்பிடித்து வருகிறது. இன்றைக்கு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80 சகவீதம்பேர் தோல்வி அடைந்துள்ளது மறைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 20% வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த எடப்பாடியார் கொண்டு வந்த 7.5 சதவீதம் மூலம் மருத்துவ வாய்ப்பு பெற முடியும்.

சோதனை என்ற பெயரில் தொடர்ந்து வஞ்சம் தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது. இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த அராஜக நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். எடப்பாடியாருக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றியையும், திமுக அரசு கொண்டு வந்த சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, நீட் தேர்வில் தமிழகம் பின்னடைவு இவற்றை எல்லாம்  திசை திருப்பத்தான் சோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.