சென்னை: நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பலர் மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு போதிய அளவு சார்ஜிங் மையங்கள் இல்லை. இதனால், சிலர் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீ தொலைவுக்கும், மாநகரங்களில் ஒவ்வொரு 3 கிமீ தொலைவுக்கும் சார்ஜிங் நிலையங்களை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்தில் 100 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.