சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு பகுதியில் புரட்சி பயணம் என்ற பெயரில் சசிகலா சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இன்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் தங்கமணி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தங்கமணியின் சொந்த ஊரான பள்ளிப்பாளையத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தனது தலைமையில் அதிமுக மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது தான் திமுகவின் சாதனை. அதிமுகவை மீட்பது தான் எனது முழு பணி. வரலாறு உள்ள வரை எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகிய மாப்பெரும் தலைவர்களை யாரும் மறக்க முடியாது. 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் திமுக நிறைவேற்றவில்லை. மின்சார கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய ஒன்று. 63 சதவீதம் பேர் 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த கூடியவர்களாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மின் கட்டணம் உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின் கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழக தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன். அதிமுகவில் இருந்து எல்லோரையும் சேர்த்து கொள்வதுடன், அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் தனக்கு முக்கியம்” எனத் தெரிவித்தார். சசிகலா வருகையையொட்டி அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.