மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் ராமசாமி படையாட்சியார். இவர் தென்ஆற்காடு மாவட்டமான தற்போதைய கடலூரில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார்.
அவர் கடலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராமசாமி படையாட்சியார், பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மக்கள்நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார் ராமசாமி படையாட்சியார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.6.2018 அன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாட்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், இன்று ராமசாமி படையாட்சியாரின் 105-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், நேரிலும் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவின் டுவிட்டர் பதிவில், “பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 105 ஆவது பிறந்தநாளில் அவரது சிறப்புகளை போற்றுவோம்… வணங்குவோம்! என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.