கதவு மூடப்படாமல் இயங்கிய லிஃப்ட்… இடையில் சிக்கி பலியான ஆசிரியை! – மும்பையில் சோகம்

மும்பை மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் இருக்கும் செயின்ட் மேரி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தவர் ஜெனல் பெர்னாண்டஸ்(26). வசாயில் வசித்துவந்த ஜெனல் பள்ளியின் 6-வது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு 2-வது மாடியிலிருக்கும் ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் செல்வதற்காக லிஃப்டில் ஏறினார். அப்படி லிப்டில் ஏறும்போது லிஃப்டின் முன் கதவு மூடப்படாத நிலையில் லிஃப்ட் திடீரென 7-வது மாடியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. ஆசிரியை லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். இதில் ஆசிரியையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆசிரியையின் அலரல் சத்தத்தைக் கேட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து அவரை லிஃப்டிலிருந்து மீட்டனர். அவரை பள்ளி ஊழியர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்துக்குள்ளான லிப்ட்

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால், அவர் தலையில் பலத்த அடி ஏற்பட்டிருந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியை ஜெனல் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருந்தார். இது குறித்து அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “லிஃப்ட் கம்பெனி ஊழியர்கள் அடிக்கடி வந்து சோதனை செய்து பராமரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததே கிடையாது. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மரணம்

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு போலீஸாரும் விரைந்து வந்தனர். போலீஸார் இது குறித்து விபத்து மரணம் என வழக்கு பதிவுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டுதான் ஆசிரியை ஜெனலுக்கு திருமணமாகி இருந்தது. அவர் கணவர் கப்பலில் வேலை செய்கிறார். அவர் கணவர் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தார். ஜெனல் லிஃப்ட் விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.