டேராடூன்,:தன்னுடைய மகளை பார்க்கவிடாமல் தடுத்ததாகவும், பொய் வாக்குறுதிகள் அளித்து அரசு அதிகாரிகள் தன்னை ஏமாற்றியதாகவும், உத்தரகண்ட் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட பெண் ஊழியரின் தாய் புகார் கூறியுள்ளார்.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டம் ரிஷிகேஷ் அருகே யாம்கேஷ்வர் என்ற இடத்தில், பா.ஜ.,விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி நடத்தி வந்தார்.
இந்த விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, 19, என்ற இளம் பெண்ணின் உடல், அருகில் உள்ள கால்வாயில் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்டது.விடுதியில் தங்கும் விருந்தினர்களுடன் உல்லாசமாக இருக்க, அங்கிதாவை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் அவரை புல்கித் ஆர்யா கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து விசாரித்த போலீசார், புல்கித் ஆர்யா மற்றும் விடுதி நிர்வாகிகள் இருவர் என, மூன்று பேரை கைது செய்தனர்.இந்த விவகாரத்தில் நீதி கேட்டு, அங்கிதா பண்டாரியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்தப் பெண்ணின் உடல் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து அப்பெண்ணின் தாய் கூறியுள்ளதாவது:என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனக்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லை.என் மகளுடைய உடலை பார்க்க அனுமதிப்பதாக கூறினர். ஆனால், அவசரம் அவசரமாக உடலை தகனம் செய்துள்ளனர்.என்னை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகள் அளித்து மருத்துவமனையில் தங்க வைத்துள்ளனர். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement