“என்னிடம் தகாத முறையில் நடந்தார்; சொல்வதற்கே நடுக்கமாக உள்ளது" – மலையாள நடிகையின் பதிவு

கேரள மாநிலம் கோழிக்கோடு ஹைலைட் மாலில் (Saturday night) சினிமா புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்ற நடிகைகள் சானியா ஐயப்பன், க்ரேஸ் ஆண்டனி இருவரிடமும் கூட்ட நெரிசலில் சிலர் மோசமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தன்மீது கைவைத்த ஒருவரை நடிகை ஓங்கி அடித்த சம்பவமும் நடந்துள்ளது. நேற்று இரவு சினிமா புரமோஷன் முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கிய இரண்டு நடிகைகளுடன் செல்ஃபி எடுப்பதற்காக சிலர் நெருங்கிச்சென்றனர். அப்போது ஒருவர் நடிகை ஒருவர் மீது கைவைத்துள்ளார். இதனால் கோபமான நடிகை அந்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தீரங்காவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்கும் நடிகை

இதுகுறித்து நடிகை க்ரேஸ் ஆண்டனி தன் சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “கோழிக்கோடு ஹைலைட் மாலில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு என்னை உறையவைக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. நான் மிகவும் விரும்பும் ஓரிடம் கோழிக்கோடு.

ஆனால், நிகழ்ச்சி முடிந்து வந்த என் உடலில் பலவந்தமாக அங்கிருந்த ஒருவர் கைவைத்தார். என்னிடம் தகாத முறையில் நடந்ததைப் பற்றிக் கூறுவதற்கு நடுக்கமாக உள்ளது.

நடிகையின் பதிவு

அவ்வளவு மோசமானவர்களா (frustrated) நம்மைச்சுற்றி உள்ளார்கள். புரமோஷனுக்காக எங்கள் டீம் பல இடங்களுக்கும் போயுள்ளது. அங்கு இல்லாத மிகவும் மோசமான அனுபவம் எனக்கு இங்கு ஏற்பட்டது. என்னுடன் இருந்த சக நடிகைக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது. அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார். ஆனால், என்னால் அப்படி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. ஒரு நிமிடம் நான் உறைந்துபோய்விட்டேன். அதே உணர்வற்ற நிலையில் இருந்து நான் கேட்கிறேன், தீர்ந்துவிட்டதா உங்களைபிடித்த அந்த நோய்?” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.