ஏன் PFI மட்டும்… RSS-ஐ விட்டு விட்டீங்களே? தெற்கில் இருந்து கிளம்பிய கலகக் குரல்!

மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவது, பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை குறிவைத்து என்.ஐ.ஏ ரெய்டு நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கைது, வழக்குகள், 5 ஆண்டுகளுக்கு பி.எஃப்.ஐ-க்கு தடை என அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறின. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

அதேசமயம் காங்கிரஸில் இருந்து எதிர்ப்பு குரலும் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய கேரள மாநிலம் மாவெலிக்கரா தொகுதி எம்.பி கொடிக்குன்னில் சுரேஷ், பி.எஃப்.ஐ அமைப்பிற்கு மட்டும் ஏன் தடை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். ஏனெனில் நாடு முழுவதும் இந்துத்துவாவை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் பெரும்பான்மை சமூகத்தினரை முன்னிறுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை ஆகியவற்றை வைத்து அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது தவறு. அப்படி பார்த்தால் பி.எஃப்.ஐ மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒன்று தான். எனவே இந்த இரண்டு அமைப்புகளையும் அரசு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் எந்த பலன்களும் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் மூத்த
காங்கிரஸ்
தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.ஹெச்.பி ஆகியவையும் தான் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. எனவே வெறுப்புணர்வை, வன்முறையை பரப்பும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கர்நாடக மாநில எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் முக்கியமான விஷயத்தை முன்வைத்துள்ளனர்.

அதாவது, எங்கள் அமைப்பினரை குறிவைத்து என்.ஐ.ஏ ரெய்டு நடத்துவதற்கு கண்டனங்கள். வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டரில்,

PFI என அழைக்கப்படும் popular front of India அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்திருப்பதாக மதவாத பாஜக அரசு அறிவித்திருப்பது சர்வதிகாரத்தின் உச்சம். வன்மையாக கண்டனத்துக்குரியது. பாத்திக்கப்பட்ட மக்கள் குரலாய் களமாடும் PFI தடையை நீக்க அத்தனை சனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். PFI மீதான தடை உடைப்பது சனநாயக சக்திகளின் கடமை. பயங்கரவாத RSS சுதந்திரமாக செயல்படும் போது மக்கள் அமைப்பான PFI தடை செய்வது சனநாயகத்துக்கு ஆபத்து என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.